Ads (728x90)

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என பொதுநிர்வாக மற்றும் நீதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரதியமைச்சர்களான வியாழேந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர்மஸ்தான் ஆகியோர் தன்னிடம் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும்தெரிவித்தார்.

கைதிகளின் விடுதலை தொடர்பில் இதற்கு முன்னரும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இந்த உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஆராய்ந்து பார்க்கப்படும் எனவும் கூறினார்.

பெரும்பான்மை இனத்தவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், சிறுபான்மையினரின் பெரும்பான்மையைப் பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்திருக்கும் சூழ்நிலையில் கைதிகளை விடுவிக்கக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் மற்றும் நாமல் ராஜபக்ஷ் எம்.பி ஆகியோருடன் கலந்துரையாடி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பொறிமுறையொன்றை விரைவில் தயாரிக்கவிருப்பதாக அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget