Ads (728x90)

சபாநாயகரின் கட்சி சார்பான நடவடிக்கைகளை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

 இவர் அரசியல் யாப்பு மற்றும் பாராளுமன்ற நிலையியல் கட்டளை, சம்பிரதாயம் ஆகியவற்றை மீறிய வகையில் செயற்பட்டு வருவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னணி தெரிவித்துள்ளது.

சபாநாயகரின் பாராளுமன்ற நடவடிக்கைகள் அரசியல் யாப்பு, நிலையியற் கட்டளை சம்பிரதாயங்களை மதிப்பதாக அமைய வேண்டும். இருப்பினும் தற்போதைய சபாநாயகர் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரை போன்று செயற்பட்டு வருகிறார்.

பாராளுமன்ற சம்பிரதாயம், அரசியல் யாப்பு மற்றும் நிலையியற் கட்டளை மீறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரை நிராகரிப்பதற்கு அரசாங்க கட்சி தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக பக்கசார்பற்ற வகையில் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சபை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் சம்பிரதாயம், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆகக் கூடிய பிரதிநிதித்துவம் அரசாங்க கட்சிக்கு வழங்குவதே ஆகும். இதனை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்கள் மேற்கொண்டு வந்த சம்பிரதாயமாகும். இருப்பினும் தற்போது சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்படுகின்றார். வாக்கெடுப்பின் போது எதிர்த்தரப்புக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்துள்ளார். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

1994 ஆம் ஆண்டு பொதுமக்கள் ஐக்கிய முன்னணியினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் 112 உறுப்பினர்கள் மாத்திரமே அங்கம் வகித்தனர். அப்பொழுது சபாநாயகராக செயற்பட்ட கே.பி.ரட்நாயக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை அரசாங்க கட்சிக்கே பெற்றுக்கொடுத்தார்.

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அரசாங்கமாகவே இருந்தது. அதன் சபாநாயகராக  லொக்கு பண்டார செயற்பட்டார். இருப்பினும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி 41 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் ஒன்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டது. அப்பொழுது பாராளுமன்றத்தில் சபாநாயகராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக சமல் ராஜபக்ஷ சபாநாயகருக்கான பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி ரணில் விக்ரமசிங்கவின் குறைந்த உறுப்பினர்களை கொண்ட அரசாங்கத்திற்கு, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை வழங்கியதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

 கடந்த மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை அங்கத்துவத்தை பெற்றுக்கொடுப்பது சபாநாயகரின் பொறுப்பாகும். அவ்வாறு இருக்கையில் சபாநாயகர் அரசியல் யாப்புக்கும் நிலையியற் கட்டளைக்கும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் மாறுபட்ட விதத்தில் எதிர்த்தரப்பினருக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பெரும்பான்மை அங்கத்துவத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதன்மூலம் இவர் பாராளுமன்றத்தின் நிறையியற் கட்டளை மற்றும் சம்பிரதாயத்தையும் அரசியல் யாப்பையும் மீறியிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது சபாநாயகரின் பதவியின் பொறுப்பு மற்றும் பக்கசார்புபற்ற நிலைக்கும் பெரும் குந்தகமாக அமைந்துள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget