நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இன்னும் ஒருவார காலத்தில் தீர்வு கிடைக்கும் என நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இவை நாட்டுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள். நல்லாட்சியின் கொள்கைகளை பச்சையாக கொன்றவர் ரணில். நான் பொறுத்து பார்த்தேன். ராஜபக்ஷ ஆட்சியில் நான் இருந்த பொறுமையை விட நான் இதில் பொறுமை காத்தேன்.
மஹிந்தவை நியமித்தமை மூன்று வருட எனது கடின பயணத்தின் தாங்க முடியாத விளைவே. நாட்டை நாசமாக்கிய ரணில் அந்த கட்சியை வீணாக்கினார். என்னை – எனது ஆட்சியையும் வீணாக்கினார். அதற்கு தீர்வு அவரை பிரதமர் பதவியில் இருந்து விரட்டுவது என்று முடிவெடுத்தேன்.
அவரின் தேவைப்படி நாட்டை நாசமாக்க நான் விடவில்லை.
வடக்கு மக்களை ஏமாற்றினார். தீர்வு கொடுக்க வாய்ப்பிருந்தும் அவர் அதை செய்யவில்லை. ஏமாற்றினார். அதுவே உண்மை. அவரை நீக்க நான் எடுத்த முடிவு என்றும் சரிதான்.
5 வர்த்தமானிகளை பிரசுரித்தேன். ரணிலை நீக்க, பிரதமராக மஹிந்தவை நியமிக்க, அமைச்சரவையை ஏற்படுத்த, சபையை ஒத்திவைக்க, சபையை கலைக்க நான் வர்த்தமானிகளை பிரசுரித்தது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே.
உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்றவர்களுக்கு இடைக்கால தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளன. இங்கு தாக்கல் செய்யப்பட்டவை கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகள் அல்ல. நீதிமன்றம் குறித்து மக்கள் மனதில் பல எண்ணங்கள் உள்ளன. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன்.
ஆனால் ஒரு சாரார் நீதிமன்றம் நீதியானது என்று கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர் பக்கச் சார்பானது என்று கூறுகின்றனர். நாங்கள் அரசியலமைப்பின் படியே நடக்கின்றோம். ரணில் தனது பதவிக்காக தூதரகங்களை நாடி நிற்கின்றார்.
225 பேர் கையொப்பம் வைத்து கொடுத்தாலும் ரணிலை மீண்டும் நான் பிரதமராக நியமிக்க மாட்டேன். எனக்கு தனிப்பட்ட கோபம் அவருடன் இல்லை. ஆனால் இந்த நாட்டுக்கு அவர் பொருத்தமற்றவர்.
என்னுடன் கோபிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே. உங்கள் கட்சியின் தலைவர் உங்கள் கட்சியை நாசமாக்கி விட்டார். நல்ல தலைவர்கள் வழிநடத்திய கட்சி இன்று வீணாக்கப்பட்டு விட்டது.
இந்த நிலைமையில் தான் நாங்கள் நாட்டுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்க வேண்டி வந்தது.
சுதந்திரக் கட்சி நாட்டை காப்பாற்றும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிலைமை மாறும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். நான் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ரணிலே இதற்கு காரணம். எனவே இந்த நிலைமையை மாற்ற நான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment