
பிலிப்பைன்ஸுக்கான அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிலிப்பைன்ஸ் சபாநாயகரும் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி. குலோரியா மெகபங்கல் அரோயோ (Gloria Macapangal Arroyo) ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (17.01) பிற்பகல் மனிலா நகரில் இடம்பெற்றபோதே பிலிப்பைன்ஸ் சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) அவர்களுக்கும் தனக்கும் இடையிலான கலந்துரையாடல்களின்போது இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்தப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை விரிவாக முன்னெடுத்துச் செல்வதற்காக பிலிப்பைன்ஸ் தூதரகமொன்றை கொழும்பில் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் ஒருமைப்பாட்டுக்கு வந்ததுடன், அதற்கேற்ற காணியொன்றை கொழும்பில் பெற்றுக் கொள்வதற்கான தலையீட்டைத் தான் வழங்குவதாக ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் சபாநாயகரிடம் தெரிவித்தார்.
சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்தாமல் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாதென்றும் சட்ட விரோத போதைப்பொருள் பாவனைக்கெதிராக இலங்கை மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு பிலிப்பைன்ஸ் அரசின் பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளுக்கிடையிலான விவசாயத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு அரச தலைவர்களின் சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த பிலிப்பைன்ஸ் சபாநாயகர், அந்தக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தின் பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டுப் பாராளுமன்றத்தின் செனட் சபையின் தலைவர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment