Ads (728x90)

 கொழும்பு கம்பஹா களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் மேல் மாகாணத்தில் 100 நாள் துரித வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரதும் அனைத்து அமைச்சர்களினதும் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் நேற்று இடம்பெற்ற வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

மேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்களின் மூலம் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுத்தம் சுகாதாரம் போதைப்பொருள் பாவனையற்றதும் சிறந்த போக்குவரத்து ஒழுங்கு விதிகளைப் பேணும் வகையிலும் மேல்மாகாணத்தை துரிதமாக கட்டியெழுப்புவதுடன் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் உள்நாட்டு – வெளிநாட்டு விசேட உதவிகளையும் பெற்று எட்டு மாகாணங்களுடனும் ஒன்றிணைந்து தமது பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் மேல் மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் பேசும் மக்களுக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அவலங்கள் இனியும் தொடர இடமளிக்கப் போவதில்லை. தமது குறைகளை பொதுமக்கள் எந்த வேளையிலும் தன்னைச் சந்தித்து முறையிட்டு அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget