Ads (728x90)

யாழ்நகரில் கடை தொகுதிகளின் மத்தியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் இருந்த வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் அதை சட்டத்திற்கு புறம்பான முறையில் அபகரித்து அதனை தனது கடையுடன் இணைத்துள்ளார். இதனால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது.

குறித்த விடயம் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் அது தொடர்பில் எந்தவிதமான சட்ட நடவடிக்கையையும் முன்னெடுக்க நிர்வாகம் தயக்கம் காட்டி வருகின்றது.

சட்டவிரோத அபகரிப்பு தொடர்பில் சகல ஆவணங்களும் இருக்கின்ற நிலையில் மாநகர சபை நிர்வாகம் அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க தவறி வருகின்றமை, தற்போதைய மாநகர சபை நிர்வாகத்தின் மீது வலுத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அபகரிக்கப்பட்ட குறித்த வீதி மீண்டும் மக்களுடைய பொது பாவனைக்காக திறந்து விட வேண்டும் என்று கோரியும், அவ்வீதியை அபகரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே நேற்று போராட்டம் நடாத்தப்பட்டது.

“ஏழைகளுக்கு ஒரு நீதி.. செல்வந்தா்களுக்கு ஒரு நீதியா?”, “வரைபடங்களிலிருந்து காணாமல்போகும் வீதிகள் எங்கே மாநகரசபையே?”, “முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பில் வீதிகள் கூட தப்பவில்லை..” என கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.

Post a Comment

Recent News

Recent Posts Widget