தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலகெதர நகரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிள் தேர்தல் கொள்கை பிரகடனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை அனைத்து இன மக்களுக்கம், பொதுவானதாகவும், பொருளாதாரத்தினை முன்னேற்றுவதாகவும் காணப்படுகின்றது. ஆனால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனம் ஒருதலைபட்சமானது.
இலங்கை தமிழரசு கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவர் ஊடகங்களுக்கு சிங்கள மொழியில் ஒரு விதமாகவும், தமிழ் மொழியில் பிறிதொரு விதமாகவும் கருத்துரைத்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் சிங்கள மொழியில் ஒருமித்த நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் சமஷ்டி முறைமையினை தோற்றுவிப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு இனத்தினை ஏமாற்றும் செயற்பாடாகும். எனவே நாடு மீண்டும் பிளவுப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment