Ads (728x90)

காலி முகத்திடல் பகுதியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து அதனை 3 நாட்களுக்குள் அழகுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

அங்கு நடைப்பெறும் மோசடிகள் மற்றும் குறைபாடுகளை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு குழுவொன்றை நியமிக்குமாறும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையிலான கண்காணிப்பு குழுவொன்றினை நியமிக்குமாறு இதன்போது அமைச்சர் வலியுறுத்தினார்.

அமைச்சர் அண்மையில் காலி முகத்திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டதன் பின்னரே இவ்வறிவுறுத்தலை விடுத்தார். இவ்விஜயத்தின் பின்னர் அமைச்சர், காலி முகத்திடலின் முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அவசியமான பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவான ‘அனைவருக்கும் தூய்மையான நாட்டை கையளிப்பது’ எனும் எண்ணக்கருவுக்கு உயிரூட்டம் அளிக்கும் வகையில், பொழுதுபோக்கிற்காக மற்றும் ஓய்வுபொழுதை கழிப்பதற்காக பொதுமக்கள் வருகைத்தரும் கடற்கரைச் சார் காலி முகத்திடலை மிகவும் சுத்தமான மற்றும் ரம்மியமான இடமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடனேயே அமைச்சரின் விஜயம் அமைந்திருந்தது.

மேலும் காலி முகத்திடலில் உள்ள குறைப்பாடுகளை 3 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் கட்டளையிட்டதுடன், உல்லாசப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தடங்கல்கள் ஏற்படாதவாறு வீதிகளை புனரமைத்தல், மக்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முறையொன்றினை திட்டமிடுதல், மற்றும் கடற்கரையினை முழுமையாக சுத்தம் செய்தல், ஆகிய செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget