நான் பணத்தை திருப்பியனுப்பியதாக மஹிந்த ராஜபக்ச பொய் சொல்லியுள்ளார். வெளிநாட்டில் என் மீது குறைகூறி தனக்கு நற்பெயரை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறாரா? என கேள்வியெழுப்பியுள்ளார் வடக்கு முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.
வடக்கிற்கு அனுப்பிய நிதியை விக்னேஸ்வரன் பாவிக்காமல் திருப்பி அனுப்பினார் என இந்தியாவில் சில தினங்களின் முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தவறான தகவலொன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா? என்று தெரியவில்லை.
என்னுடைய ஐந்து வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது. அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசெங்கு இருக்கின்றது? அதன் பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது.
அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் பாதிக்கப்பட்டன. தாமதம் அடைந்தன. நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.
இரண்டாவது நாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள்.
ஆனால் நடப்பது என்ன? அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி.
ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும்.
அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும். அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850 க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. பிரதமரின் அமைச்சு ஏதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதா என்பதை அவர்தான் கூற வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment