Ads (728x90)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் சரியானதே என்பதை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நாவிலுள்ள எந்தச் சபையாலும் இலங்கையை எதுவுமே செய்ய முடியாது என்பதையும் அவர் கவனத்தில்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43ஆவது அமர்வில் நேற்று முன்தினம் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை முன்வைத்துப் பேசிய ஆணையாளர் மிச்செல் பச்லெட், ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகும் முடிவைக் கண்டித்திருந்தார். உள்ளகப் பொறிமுறை ஒன்றை நியமிப்பது என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டையும் அடியோடு நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்க வேண்டாம் என்று ரணில் அரசை அப்போது நாம் வலியுறுத்தி இருந்தோம். நாட்டைப் பாதிக்கச் செய்யும் அந்தத் தீர்மானங்களுக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியது.

நாட்டின் பாதுகாப்பு, சட்டங்கள், அரசமைப்பு, காணி விவகாரம், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் குறித்துப் பாரதூரமான பரிந்துரைகள் ஐ.நா. தீர்மானங்களில் இருந்தபடியாலேயே அதிலிருந்து நாம் விலகியுள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை மீறி ஐ.நாவால் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாது. ரணில் அரசு மாதிரி சர்வதேச அரங்கில் இலங்கையை எமது அரசு காட்டிக்கொடுக்காது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்ற ஐ.நாவின் குற்றச்சாட்டுக்களை உள்நாட்டு விசாரணையின் மூலம் விசாரித்து அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வோம்.

நாட்டின் இறையாண்மையை மீறி இதைக் கண்டிப்பதற்கும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறியுள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget