மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நடமாடும் நூலகம் ஒன்றை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இரட்டை தட்டு கொண்ட பழைய பஸ் ஒன்றை நவீனமயப்படுத்தி பொருத்தமான வகையில் இந்நூலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையை ஆரம்பித்து 05 வருடங்கள் ஆகியும் இதுவரை நூலகம் ஒன்று இருக்கவில்லை. 430 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலைக்கு நூலகம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக பல வருடங்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.
கடந்த ஜூலை மாதம் 05ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மெதிரிகிரியவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது பாடசாலையில் தரம் 03 இல் கல்விகற்கும் வினுரி தஹம்ஷா என்ற மாணவி பாடசாலைக்கு நூலகம் ஒன்றை பெற்றுத் தருமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க அவர்களின் ஏற்பாட்டின் மூலம் மஹரகம டிப்போவில் இரும்புக்காக ஏல விற்பனைக்காக வைத்திருந்த இரட்டை தட்டு கொண்ட பஸ் ஒன்றை சபையின் ஊழியர்களால் நடமாடும் நூலகம் ஒன்றுக்கு பொருத்தமான வகையில் நவீனமயப்படுத்தப்பட்டு,
நூலகத்திற்கு அவசியமான புத்தகங்களுடன் வழங்கப்பட்டது. மாணவி வினுரி தஹம்ஷா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment