அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 05.08.2020 ஆம் திகதி அதாவது இன்று நடைபெற்றது. கருவறை அமையும் இடத்தில் 40 கிலோ வெள்ளியிலான அடிக்கல்லை இந்தியப் பிரதமர் மோடி நாட்டியுள்ளார். இன்று 500 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது.
இந்நிலையில் அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவிற்காக இன்று அயோத்தி மாவட்டம் முழுதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு பூமி பூஜைக்கான சடங்குகள் அயோத்தியில் நேற்று முன்தினம் 03.08.2020 திகதி ஆரம்பிக்கப்பட்டது. வாரணாசியில் இருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று காலை 8:00 மணி முதல் அடிக்கல் நாட்டுவிழாவிற்கான பூஜைகள் ஆரம்பமாகின.
விழாவில் பங்கேற்பதற்காக டில்லியிலிருந்து இன்று காலை 09:30 மணிக்கு சிறப்பு விமானத்தில் லக்னோ சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றார். அவரை முதல்வர் யோகி வரவேற்றார்.
பின்னர் கார் மூலம் ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்ற பிரதமர் சிறப்பு வழிபாடு செய்தார். இதன் பின்னர் கடவுள் இராமர் பிறந்த இடத்திற்கு சென்று பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மரக்கன்றை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.
வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க, பூமி பூஜை சடங்குகள் நடந்தன. அடுத்து இராம ஜன்மபூமிக்கு சென்ற அவர், பகல் 12:40 மணிக்கு கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார்.
பூமி பூஜைக்காக 2,000 கோயில்களில் இருந்து புனித மண் மற்றும் 100 நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment