Ads (728x90)

இன்று முதல் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பஸ் ஒழுங்கையில் பயணிக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளிலுள்ள நான்கு பிரதான வீதிகளை மையமாகக் கொண்டு பஸ் முன்னுரிமை ஒழுங்கை முறை மற்றும் வீதி ஒழுங்கை விதிமுறை நேற்று முன்தினம் முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய பேஸ்லைன் வீதியில் புதிய களனி பாலத்திலிருந்து ஒறுகொடவத்த, தெமட்டகொடை, பொரளை, நாரஹேன்பிட்டி ஊடாக ஹைலெவல், பேஸ்லைன் சந்தி வரையும் வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர மாவத்தையின் பொல்துவ சந்தியிலிருந்து இராஜகிரிய மேம்பாலம், ஆயுர்வேத சுற்றுவட்டம், டி.எஸ். சேனநாயக்க சந்தி, ஹோர்டன் சுற்றுவட்டம், நூலக சந்தி மற்றும் லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையும் வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தவிர காலி வீதியில் வில்லியம் சந்தியிலிருந்து டிக்மன் வீதிச் சந்தி, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, காலிமுகத்திடல் சுற்றுவட்டம், என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரை வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அனுலா வித்தியாலயத்தின் அருகிலிருந்து ஹைலெவல் வீதி, பேஸ்லைன் சந்தி, பார்க் வீதி சந்தி, திம்பிரிகஸாய சந்தி, தும்முல்லை சுற்றுவட்டம், கிளாஸ் ஹவுஸ் மற்றும் பித்தளை சந்தி வரை வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதி நிரலைத் தவிர்த்து வீதி முழுவதிலும் செல்வதினாலே வாகன நெரிசல் ஏற்படுவதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவ்வீதி ஒழுங்கை மீறுபவர்களுக்கு எதிராக ரூபா 2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget