பார்படோஸ் மக்கள் காலனித்துவ ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெறவேண்டுமென நீண்டகாலமாக கிளர்ந்தெழுந்தனர். எமது நாட்டின் ஆளுகை மீது ஏகாதிபத்தியத்தின் நீடித்த அடையாளமாக இரண்டாம் எலிசபெத் மகாராணி உள்ளார் என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில் காலனித்துவ ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெறும் நேரம் வந்து விட்டது என கரீபியன் நாட்டின் ஆளுனர் நாயகம் செவ்வாயன்று ஆற்றிய உரையொன்றில் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் பெற்று 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்படோஸ் குடியரசாக மாறும் என்று ஆளுனர் ஜெனரல் சாண்ட்ரா மேசன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணி ஐக்கிய இராஜ்ஜியம் உட்பட முன்னர் பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த 15 நாடுகளின் தலைவராக தற்போதும் உள்ளார். அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஜமேக்கா, கரீபியன் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல தீவு நாடுகள் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.
பார்படோஸ் முழு இறையாண்மையை நோக்கி நகரவுள்ளது. அந்த வகையில் பார்படோஸ் 55 ஆவது சுதந்திர ஆண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் குடியரசாக மாறும் என்றும் ஜெனரல் சாண்ட்ரா மேசன் கூறியுள்ளார்.

Post a Comment