Ads (728x90)


தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தமிழ்க் கட்சிகளின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இந்தக் கடிதத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய சார்பு கட்சிகளின் 14  பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், சிவஞானம் ஸ்ரீதரன், ரெலோ சார்பில் குருசுவாமி சுரேந்திரன், புளொட் சார்பில் பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா, ஈழத் தமிழர் சுயாட்சின் கழகம் சார்பில் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சி.சிற்பரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தாயகப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு கூரல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்ற உத்தரவை மீறி நினைவு நிகழ்வு நடத்தியதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இது குறித்த வலியுறுத்தலை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கும் வகையிலும், தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரியும் மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget