வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட கோவிட் 19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
1.திருமணம் – வீட்டில் நடத்த 50 பேருக்கு அனுமதி வழங்கப்படும். (வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கலந்துகொள்ளத் தடை)
2.இறுதிச் சடங்கு – 25 பேருக்கு அனுமதி. (02 தொடக்கம் 03 நாட்களில் நிறைவுறுத்த வேண்டும்) (வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் கலந்துகொள்ள தடை)
3.நடைபாதை வியாபாரம் – மரக்கறி வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி.
4.தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை.
5.திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை.
6.விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும்.
7.மக்கள் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டும்.
8.பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிக்களுக்கு அனுமதி.
9.உணவகங்களில் இருந்து உணவு உண்பதற்குத் தடை (பொதிக்கு மட்டும் அனுமதி).
10.வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருவோர் கிராம அலுவலகர் ஊடாக பதிய வேண்டும்.
11.தொழிற்சாலைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர், முடக்கப்பட பகுதிகளில் இருந்து வருகை தந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
12.அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்பட வேண்டும்.
13.முடக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை. முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளே குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம்.
14.ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி.
15.ஆலயங்களில் அன்ன தானங்களுக்கு தடை.
16.பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வி திணைக்களம் மேற்கொள்ளும்.
அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாட்களும் செயற்படும். அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 021 222 5000 செற்படும்.

Post a Comment