உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. மனிதர்கள் மீது பல கட்டப் பரிசோதனைகள் நடத்தி அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. அவசர சிகிச்சை மையங்களும் படுக்கை வசதிகளின்றி நெருக்கடியான சூழலில் உள்ளன. மரணமடைவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இந்நிலையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் இல்லாது மிகவும் திறனுடன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் ஜேர்மன் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளன.
இது 90 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டதில் இருந்து 28 நாட்களில் மனிதர்களுக்கு முழு பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. இரண்டாவது டோஸ் போட்ட ஏழாவது நாளிலேயே முழுமையான பாதுகாப்பு கிடைத்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி பைசர் நிறுவனத்தின் தலைவர் அல்பேர்ட் பவுர்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளுக்கான முதல் கட்ட முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் எங்களது தடுப்பூசி கோவிட்-19க்கு எதிராக முழு திறனுடன் போராடும் வல்லமை பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.
இதன்மூலம் உலக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான படியில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளோம். இந்த தடுப்பூசி உலகம் சந்தித்துள்ள சுகாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் விடுபட ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திறன் வாய்ந்த தடுப்பூசியை தயாரித்து முக்கியத்துவம் வாய்ந்த இலக்கை எட்டியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மட்டும் உலகம் முழுவதும் 50 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை தயாரித்து வழங்க முடியும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு 1.3 பில்லியன் டோஸ்கள் வழங்க முடியும் என்று கணித்துள்ளது. இது உலக மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.

Post a Comment