Ads (728x90)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவை பெறத்தவறிவிட்டது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.

இது எமக்கு மிக மகிழ்ச்சியான தருணம். ஐ.நாவின் தீர்மானத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 47 நாடுகளில் 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், 11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில் 25 நாடுகள் இந்த பிரேரணை தொடர்பிலான எதிர் நிலைப்பாட்டில் உள்ளமை வௌிப்படையாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரேரணையை கொண்டு வந்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களினால் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் செயற்பட முடியாது என கூறிய தினேஷ் குணவர்தன, அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறியே ஒருங்கிணைந்த நாடுகள் இலங்கை தொடர்பிலான பிரேரணையை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், அதனை அந்த நாடு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

எனவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும், நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உள்ளகப் பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget