Ads (728x90)

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 

பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிமன்ற தடையுத்தரவுகள் காரணமாக போராட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குள் தடையுத்தரவு காரணமாக அவை மாற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டி, மாவடிவேம்பு மருங்கையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயம் வரையில் பேரணியாக வந்தனர்.

இதன்போது தமிழர் தாயகப்பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தவேண்டும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாக தீர்வினை வழங்கவேண்டும், ஐநாவில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தினை நிராகரிப்போம், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள், எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் உட்பட பல்வேறு கோசங்கள் இந்த பேரணியின்போது எழுப்பப்பட்டன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 17வது நாளான இன்று அதனை நிறைவுறுத்தும் வகையிலும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரிய வகையிலும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணி இயக்கத்தின் வடக்கு-கிழக்கு ஏற்பாட்டாளர்களான வேலன் சுவாமி, எஸ்.சிவயோகநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யேகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.







Post a Comment

Recent News

Recent Posts Widget