Ads (728x90)


யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதிக்கான புதிய பொலிஸ் நிலையம் நேற்று  பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போது, அவர் கூறுகையில் இன்று வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களை திறந்து வைப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணி பகுதிகளில் பொலிஸ் நிலையங்களை திறந்திருக்கிறேன். 

தற்பொழுது நாடு பூராகவும் 494 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 பொலிஸ் நிலையங்களை புதிதாக அமைக்க உள்ளோம். அந்த வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வடபகுதியில் இரண்டு புதிய பொலிஸ் நிலையங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு புங்குடுதீவில் வெகு விரைவில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. 

பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது பொலிஸ் சேவையினை பெற்றுக்கொள்வதை நிறுத்த இதனை செய்துள்ளோம். தற்பொழுது நான் பொதுமக்களிடம் உரையாடும் போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளை கூறும் போது இந்த பிரச்சனையை எனக்கு கூறினார்கள். அதற்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பகுதியில்சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே வேலையில்லாப் பிரச்சினை தான் இந்த மணல் கடத்தலுக்கு காரணமாக இருக்கின்றது. எனவே கல்வி கற்று வேலையற்றுள்ளோர் மற்றும் இதன் காரணமாக கல்வியினை இடையே நிறுத்தி வேலையில்லாத உள்ளோருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முடியும். 

வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக நான் யோசித்துள்ளேன். அத்தோடு அவ்வாறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதன் மூலம் அந்த இளைஞர் யுவதிகள் சட்டவிரோத செயற்பாட்டில ஈடுபடமாட்டார்கள் எனினும் அவ்வாறு சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.

மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன். அன்றும் எதிர்த்தேன். இன்றும் எதிர்க்கிறேன். நாளையும் அதே கருத்தை தான் கொண்டுள்ளேன்.

அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று. மாகாண சபை முறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும். ஒன்பது மாகாண சபைகள் காணப்படும்போது அந்த ஒன்பது மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும். மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும். ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது. 

ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமானால் அந்த தீர்மானத்தினை நான் எதிர்க்கப் போவதில்லை. இந்த பிரதேசத்தில் மாகாணசபை இல்லாது போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினை பயன்படுத்தாது திறை சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது. ஆகவே மாகாண சபை என்பது மக்களுக்கு பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபைக்கு எதிரானவன் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget