யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்துவதை முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி செப்டம்பர் 16,17,18ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8, 9ஆம் திகதிகளில் நடாத்துவதாக பிற்போடப்பட்டது.
இதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 07ஆம் திகதி நிகழ்நிலையில் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் 15.9.2021 அன்று துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். எனினும் துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.
எனவே நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய பின்னர் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து வழமைபோன்று நடாத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தை கோருகின்றோம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment