2018 ஆம் ஆண்டு கொக்கிளாய் கிராம மக்கள் 16 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் உறுதி காணிகள் மற்றும் அனுமதிப்பத்திர காணிகளை மக்களின் அனுமதியின்றி அபகரித்து வேலி அமைத்து கொக்கிளாய் இல்மனையிட் பொறித்தொகுதி அமைத்துள்ள கைத்தொழில் அமைச்சின் கீழான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடட் அந்த செயற் திட்டத்தை விஸ்தரிக்கும் நோக்கோடு கொக்கிளாயிலிருந்து செம்மலை கிழக்கு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கையை கடந்த சில வாரங்களாக முன்னெடுத்து வருகின்றது.
இதன் முதற்கட்டமாக கொக்கிளாய் கிராமத்தில் கடந்த காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள், மேட்டு காணிகள் ,குடியிருப்பு நிலங்கள் சேமக்காலை, குளம் போன்றவற்றை உள்ளடக்கி அளவீடுகளை மேற்கொண்டு எல்லைப்படுத்தும் நடவடிக்கையை நில அளவை திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நில அளவை நடவடிக்கை தற்போது கரையோரமாக கொக்குத்தொடுவாய் கிராமம் வரை இடம்பெற்றுள்ளது.
இந்த காணி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அளவீடு செய்யப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும், சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படவிருக்கும் இல்மனையிட் அகழ்வு திட்டத்தை நிறுத்துமாறு கோரியும் கொக்கிளாய் எல்லை கிராம மக்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எமது நிலமே எமது உரிமை , கொக்கிளாய் எமது பூர்வீகம் , கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் காணி பறிக்கவா இந்த திட்டம் , நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம், வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை பறிக்கவா இந்த நாடகம் போன்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment