.இராமநாதன் நுண்கலைக் கழகமானது 1960 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி முன்னாள் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சு. நடேசபிள்ளை அவர்களினால் அவரது மாமனார் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் தொல்சீர் இசை, பரதநாட்டியம் என்பவற்றை மேம்பாடடையச் செய்தல், தமிழ் பண்பாட்டுப் பேற்றின் தனித்துவம், அடையாளம் என்பவற்றை மேம்படுத்தல் என்பவற்றினூடாகக் கற்றலுக்கான ஓர் அரணாக அமைந்திருக்க வேண்டும் என்பதே இராமநாதன் நுண்கலைக் கழகம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக இருந்தது.
இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை மேலோங்கச் செய்வதற்காகவும், சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவும் அதனை ஒரு உயர்நிலை நிறுவனமாக அல்லது பீடமாக தரமுயர்த்த வேண்டிய தேவையை உணர்ந்ததன் பின்னணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்தது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜயந்த் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஒப்பமிட்டதன் படி வெளியிடப்பட்ட 2293/22 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி மூலம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இசைத்துறை, வாத்தியத்துறை, நடனத்துறை, ஓவியத்துறை, சிற்பக்கலைத்துறை, நாடக அரங்கியல் துறை ஆகிய ஆறு துறைகள் இப்பீடத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, பண்ணிசை, மிருதங்கம்), நடனம் (பரதநாட்டியம்), சித்திரமும் வடிவமைப்பும், நாடகமும் அரங்கியலும் (நான்கு வருடங்கள்) எனும் நுண்கலைகளுக்கான இளங் கலைமாணிச் சிறப்புப் பட்டங்களை, இந்தப் பட்டப்படிப்பு பாடநெறிகளின் முன்னோடியான இராமநாதன் நுண்கலைக் கழகத்தினூடாக வழங்கி வந்தது.
ஒவ்வொரு பாடநெறியாலும் வழங்கப்படுகின்ற இளம் நுண்கலைமாணிப் பட்டங்கள் தொழில் தகைமையுடையனவாகும்.
இதனால் இவர்கள் மிகச் சிறந்த முறையில் போதுமான வளங்களுடனும், போட்டித் தன்மையுடனும், தொழிற்றகைமை பெறத்தக்க வகையிலும் பயிற்றுவிக்கப்படுதல் வேண்டும் என்ற நோக்கோடு தற்போது சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் உருவாக்கப்பட்டுள்ளது
Post a Comment