பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வாழ் இலங்கையர்களை நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடல் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வடக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளை பேணி வருகிறோம்.
எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும், தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும்.
நாம் பெற்றுள்ள கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல் இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம்.
அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது.
உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள் என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

Post a Comment