Ads (728x90)


கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் 691 பில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றேன். பதவி வகித்த 203 நாட்களில்  446 பில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டது. பணவீக்கம் 18 சதவீதமாக காணப்பட்டது. 

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்நலால் வீரசிங்க பதவியேற்று 207 நாட்களுக்குள் 691 பில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. பணவீக்கம் 66சதவீதமாக உயர்வடைந்துள்ளது. நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலைக்குரியதாகும். 2.9 பில்லியன் நிதி பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எடுப்பது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டியவர்கள் இன்று பொருளாதாரத்தை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளார்கள்.  

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் நிதியை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பன்மடங்கு வரி அதிகரிக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எதிர்வரும் மாதம் எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ள போதும், கடன் மறுசீரமைப்பு அதற்கு பிரதான தடையாக உள்ளது. வங்குரோத்து நிலையை அறிவித்துள்ள பின்னணியில் கடன் மறுசீரமைப்பிற்கு பிரதான கடன் வழங்குநர்கள் இணக்கம் தெரிவிப்பதை தாமதப்படுத்தி வருகிறார்கள்.

இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை அடைவது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை தவிர அரசாங்கத்திடம் பிற திட்டங்கள் ஏதும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget