அடிப்படை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் காவல்துறை மாஅதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் அரச புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோர் குற்றவாளிகள் என இலங்கையின் உயர் நீதிமன்றம் கடந்த 12ஆம் திகதி தீர்ப்பளித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க இலங்கை நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் 11 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாடு முழுவதும் தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளில் 270 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
உண்மையைக் கண்டறியவும், நீதியை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்குமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களின் துன்பம் மற்றும் வலியை துடைக்க முடியாது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக இந்த தீர்ப்பு ஒரு படியாகும். உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றுக்கான அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லோரன்ஸ் கூறியுள்ளார்.

Post a Comment