Ads (728x90)

க.பொ.த.உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை துண்டித்து மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க மின்சார சபைக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளதால் மாணவர்களுடன் விளையாடவோ அல்லது பொருளாதாரத்துடன் விளையாடவோ இது நல்ல நேரம் அல்ல என்று கூறிய  ரத்நாயக்க, தேவையான மின்சாரத் திறனில் 95 சதவீதத்தை நீர் மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்கவை மூலம் வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சையின் போது மின்சாரம் வழங்குவதற்கு எரிபொருளை கொள்வனவு செய்ய 500 கோடி ரூபா தேவை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கூறியது பொய் எனவும், மின்துறை மற்றும் மின்சாரத்துறை பற்றி அறியாத அமைச்சரை பதவியில் இருந்து நீக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் அறிவுள்ள ஒரு அமைச்சரை நியமித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல்களை நடத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டு மக்கள் அனைவரும் மின்சார பாவனையை மேலும் குறைக்க வேண்டும். உள்ளுராட்சி சபையின் கீழுள்ள வீதி விளக்குகளை மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அணைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மின்சார சபையும், திறைசேரியும் ஒத்துழைத்து எதிர்கால சந்ததியினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். பரீட்சை காலங்களில் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் மாத்திரம் மின்சாரத்தை துண்டித்து மின்சார சபையையும் ஆதரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget