Ads (728x90)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத்திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சீர்கேடுகளுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த விடயத்தினை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக கடந்த ஜீன் மாதம் நியமிக்கப்பட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, அங்கு நிலவி வந்த நிர்வாக சீர்கேடுகளையும், குறைபாடுகளையும் அடையாளம் கண்டு அவற்றைச் சீர்செய்வதற்குத் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் பெண் நோயியல் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு. பிரிவு ஆகியவற்றைச் செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம் கடந்த 14 வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்ததுடன், நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அவற்றைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர், முதற் கட்டமாக ஐ.சி.யு. மற்றும் மகப்பேற்றுப் பிரிவு ஆகியவற்றைச் செயற்படுத்தியுள்ளார்.

மேலும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் சத்திர சிகிச்சை பிரிவை இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதேபோன்று குறித்த வைத்தியசாலையில் உயிரிழப்பவர்களின் உடல்கள், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் அதனை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொண்டு, பொது மக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற அசௌகரியங்களைத் தடுப்பதற்கும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் மருந்துப் பொருட்கள் உரிய களஞ்சியப்படுத்தல் ஏற்பாடுகள் இன்றி தரையில் போடப்பட்டிருந்ததுடன், குறித்த வைத்தியசாலையில் 22 வைத்தியர்கள் கடமையாற்றி வந்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் மாதத்தில் 10 நாட்கள் மாத்திரமே வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளனர்.

இவ்வாறான பல்வேறு சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு வைத்திய அத்தியட்சகர் முன்னெடுத்த முயற்சிகளை விரும்பாத சக்திகள், அங்கு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவை அனைத்தையும் அறிந்து கொண்ட பொதுமக்கள் பாரிய போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.

எனவே குறித்த விவகாரம் தொடர்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget