Ads (728x90)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ”சகலருக்கும் வெற்றி” என்ற தொனிப்பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கண்டியில் குயின்ஸ் ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது. 

தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கமாகும்.' என சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாஙக் சேவை முழு அரசாங்க சேவையையும் உள்ளடக்கிய விரிவான மனித வள கணக்காய்வை மேற்கொண்டு, மனித வள முகாமைத்துவ திட்டத்தின் அடிப்படையில் முழு அரசாங்க சேவையையும் மறுசீரமைத்தல்.

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப்பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதி பூண்டுள்ளோம். 

6 மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது அரசாங்கம் தகுதியான அனைத்து அரசதுறை ஊழியர்களுக்கும் வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கைச் செலவுப்படியை தற்போதைய ரூபா 17,800 வரம்பிலிருந்து குறைந்தபட்சம் ரூபா 25,000 வரை உயர்த்துவதுடன் இது தற்போதைய படிகளுடன் சீராக்கப்படும்.

அரச சேவைக்கான குறைந்தபட்ச அடிப்படை மாதச்சம்பளம் (தற்போதைய தர விகிதங்களின் அடிப்படையில்) 24% உயர்த்தப்படும். இந்த சீராக்கலில் தற்போது அனுபவிக்கும் பல்வேறு சீராக்கல்கள் மற்றும் படிகளுக்கான சில விதிமுறைகளும், நிபந்தனைகளும் அடங்கும். மேற்கண்ட இரண்டு சீராக்கல்களும் சேர்த்து வாழ்க்கைச் செலவுப்படி உட்பட அரசசேவையின் குறைந்தபட்ச தேறிய சம்பளம் ரூபா 57,500 ஆக இருக்கும்.

40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசின் பங்களிப்புடன் முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரோக்கிமான குடிமக்களை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்தின் சிகிச்சை செலவைக் குறைத்தல் இதன் நோக்கமாகும்.

சிரேஷ்ட குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு நேரடி நிதி உதவி வழங்கப்படும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 50,000 நபர்களுக்கான நலன்புரி உதவித் தொகையை மாதத்திற்கு ரூபா 10,000 வரை (ரூபா 7,500 இலிருந்து) அதிகரித்தல். 820,000 முதியோர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி உதவித்தொகையை மாதத்திற்கு ரூபா 5,000 வரை (ரூபா 3,000 இலிருந்து) அதிகரித்தல்.

அபாயத்திற்கு உள்ளான மற்றும் இடம்பெயர் குடும்பங்களுக்கு மாதம் ரூபா 10,000 (ரூபா 5,000 இலிருந்து) வரையும், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூபா 10,000 (ரூபா 8,500 இலிருந்து) வரையும், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதம் ரூபா 15,000 விகிதம் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





Post a Comment

Recent News

Recent Posts Widget