நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் பாஷையூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் படிப்படியாக வடக்கில் போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றனர். கேரள கஞ்சா போதைப்பொருள் வடக்கில் மிக வேகமாக பரவுகிறது. போதைப் பொருளில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டெடுப்போம். இந்த போதைப்பொருளுக்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். இதனை நிறுத்த வேண்டும். அது சவால். வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம்.
நான் ஜனாதிபதியாக வருவேன் என தெற்கில் எதிர்வு கூறப்பட்ட நிலையில் வடக்கில் அவ்வளவு தூரம் நான் வருவேன் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படவில்லை.
தேர்தலுக்கு பின்னர் திசைகாட்டி அரசாங்கத்தில் இணைவேன். அமைச்சு பதவி எடுப்பேன் என சிலர் சொல்கின்றனர். அவர்கள் ஆசனங்கள் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் மக்கள் எம்முடன் உள்ளனர்.
நாம் ஊழல் திருட்டு கும்பல்களை இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் பயணிக்கப் போவதில்லை. நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்தும் செயற்பாட்டை மக்கள் செய்வார்கள்.
பார் பெமிட் கொடுத்தாக கூறப்படுகிறது. அவ்வாறானவர்கள் இல்லாது பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம். ஊழல் மோசடி இல்லாமல் பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம்.
எமது ஆட்சியில் சில சந்தேகங்கள் இருக்கலாம். படிப்படியாக அந்த சந்தேகங்கள் நீங்கும். உங்கள் பிரச்சினைகள் தீரும். எல்லோரும் தமது மொழியில் கதைத்து தமது கலாசாரத்தை பின்பற்றும் நிலையை உருவாக்குவோம்.
இரசாயன பொருட்களை உற்பத்தி செய்ய பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிப்போம். சீமெந்து தொழிற்சாலை, வாழைச்சேனை தொழிற்சாலை ஆகிய புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை வளர்க்க எம்மால் நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜிட்டல் இலங்கையை அமைப்போம். மின் கட்டணம், நீர் கட்டணம், அஸ்வெசும கொடுப்பனவு, பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறல், உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்குவோம். மூன்று நான்கு வருடங்களுக்குள் செய்வோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பலரும் வெளிநாட்டில் வியாபாரிகளாக, கல்விமான்களாக. ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப நீங்கள் யோசிப்பீர்கள் தானே? உங்கள் அறிவை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள். உங்கள் நிதியை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வாருங்கள். இந்த நேரத்தில் கொண்டு வராத நிதி மற்றும் அறிவால் பலனில்லை.
மக்களை நான் குறை கூறவில்லை. ஏனெனில் தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் தவறான பாதையில் வழி நடத்துபவர்களாக காணப்படுகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருக்கும், முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒருவருக்கும் தமிழ் மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுக்காக மேடை ஏறினார்கள்.
அவர்கள் தெற்கு கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம், எங்களுக்கு வாக்களியுங்கள் என்று இப்போது மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
எனவே எமது புதிய நாடாளுமன்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம். அதற்காக தமிழ் மக்கள் அணி திரள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment