தமிழ் இலக்கிய படைப்பியல் வரலாற்றில் மு. பொ. என பலராலும் அறியப்பட்ட ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர்.
கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற கலை வடிவங்களை அவர் தனது பரிசோதனைக் களங்களாகக் கையாண்டவர்.
இவர் யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மறைந்த சிந்தனையாளர் மு. தளையசிங்கம் அவர்களின் சகோதரர்.
1939 இல் பிறந்த மு.பொ. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்து வந்துள்ளார். சிறுவயதிலிருந்தே தனது தமையனார் மு. தளையசிங்கத்துடன் சேர்ந்து கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர்.
பல்கலைக்கழகத்தில் இருந்தபோதே 1960 களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற் கவிதைத் தொகுதியான ”அது” 1968 இல் வெளிவந்தது. 1960 களின் பிற்பகுதிகளில் சுதந்திரன் மற்றும் தினகரன் பத்திரிகைகளின் சிறுவர் பகுதிக்கு கட்டுரைகள், கதைகள் எழுத ஆரம்பித்த இவரது கைகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருந்தன.
அகவெளிச் சமிக்ஞைகள் (1980), விடுதலைகளும் புதிய எல்லைகளும் (1990), போரியல்பின் சிற்றொலிகள் (1990), யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990), நோயில் இருத்தல் (1990), கடலும் கரையும் (1996), காலி லீலை (1997), திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000), ஊஞ்சல் ஆடுவோம் (2001), பொறியில் அகப்பட்ட தேசம் (2002), சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள் (2011), போன்ற கவிதை, கட்டுரை, நாவல், சிறுவர் கவிதை, விமர்சனம், நாடகங்கள் என பல நூல்களை எழுதியவர்.
1972 இல் தலைநகர் கொழும்பு மாநகரிருந்து வெளிவந்த ”பூரணி” இதழின் ஆசிரிய குழுமத்தில் ஒருவராக பணியாற்றியவர். ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்காக ”பூரணி” இதழாசிரியர் என்.கே.மகாலிங்கத்துடன் இணைந்து பணியாற்றியவர்.
”திசை”மற்றும் ”சத்தியம்” ஆகிய வாரப்பத்திரிகைகளின் ஆசிரியராக செயற்பட்டவர். ”திசை” ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் படைப்புக்களை தந்திருப்பது அவரின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.
அவர் எழுதிய ‘திறனாய்வின் புதிய திசைகள்’என்ற நூலுக்கு மலேசியா கலை இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலக நூலுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர் வழங்கி கௌரவித்தது. அத்துடன் ‘தமிழ் நிதி’ விருதை கொழும்புத் தமிழ்ச்சங்கம் வழங்கிக் கௌரவித்தது.
இதுவரை இவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறுவர் ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் 30 இற்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஆங்கில கவிதையும் உள்ளடங்கும்.
இவரது நூல்கள் பல விருதுகளை பெற்றுள்ளன. ”கடலும் கரையும்” சிறுகதை வடகிழக்கு மாகாண விருதை 1998 இலும், சுதந்திர இலக்கிய விருதை 1998 இலும், கொழுப்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் விருதை 1998 இலும் பெற்றுள்ளது.
அதேவேளை ”நோயில் இருத்தல்” எனும் நாவல் அரச சாகித்திய விருதை 2000 இலும், ”முடிந்துபோன திசையாடல்” எனும் சிறுகதை வடகிழக்கு மாகாணசபை விருதை 2010 இலும், ”திறனாய்வின் புதிய திசைகள்” எனும் விமர்சனம் வடகிழக்கு மாகாண சபையின் சிறந்த நூலுக்கான விருதை 2011 இலும், மலேசியா அனைத்துலகப் புத்தகப் போட்டியில் முதற் பரிசை 2012 இலும் பெற்றது.
கவிதையில் ”துடிக்கும் காலம்” கவிதை அரச சாகித்திய விருதை 2012 இலும், சிறந்த நூலிற்கான தமிழியல் விருதை 2012 இலும், ”ஓயாத கிளர்ச்சி அலைகள்” மொழிபெயர்ப்பு அரச சாகித்திய விருதை 2015 இலும் பெற்றது. இதை தவிர அரச விருதான ‘சாகித்தியரத்னா’விருதிற்காக தெரிவு செய்யப்பட்டவர்.
இது தவிர இவரது இலக்கியசேவையை பாராட்டி பல கெளரவ விருதுகளும், பாராட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
American Library of Congress (New Delhi office) மூலம் கிடைத்த தெற்காசிய இலக்கிய பதிவாக்கம் செயற்திட்டத்தில் (South Asian Literary Recording Project) 2001 இல் பங்குபற்றிய ஒரே ஒரு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் இவராவார்.
போர்க்கால சூழ்நிலையில் அன்று புதிய தலைமுறை எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப்படுத்தியவர். தமையனார் தளையசிங்கத்துடன் பக்கபலமாக நின்று சமூகப்பணிகளைச் செய்தவர்.
இவ்வளவு விருதுகளையும், கெளரவிப்புகளையும் பெற்றாலும் எவ்வித தற்பெருமையும் கொள்ளாமல் எப்போதும் எளிமையாக வாழ்ந்து வந்தவர் கவிஞர் மு. பொ. அவர்கள்.
இத்தகைய பெருமைக்குரிய இலக்கிய ஆளுமை மு. பொ. அவர்கள் 06.11.2024 புதன்கிழமை கொழும்பில் காலமானார். இவரது இழப்பு இலக்கிய உலகிற்கு ஓர் பேரிழப்பாகும்.
Post a Comment