புதிய பாடசாலை தவணையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது, புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சரியாக வாங்க முடியாத அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வசதியில்லாத குடும்பங்களுக்கு அரசியல் தலையீடுகள் இன்றி குறுகிய காலத்திற்கு கொடுப்பனவுகளை வழங்கப்படும். அஸ்வெசும கிடைக்காதவர்கள் மீண்டும் மேன்முறையீடு செய்யலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும கிடைக்காதவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அவை அரசியல் தலையீடுகள் இன்றி நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும். அதில் உள்ள பெயர்களை மாற்ற மாட்டோம். ஏற்கனவே இது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளைப் பெற வேண்டுமாயின் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான நியாயமான காரணங்களை முன்வைக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் முதலில் சட்டம், அரசியலமைப்பு மற்றும் சுற்றறிக்கையால் வழங்கப்படாத அனைத்து சட்டவிரோத விடயங்களையும் திரும்பப்பெற்றோம்.
இதை வைத்து கொண்டு பழிவாங்குகிறோம் என்கின்றனர். இது பழிவாங்குவது அல்ல. சட்டத்திற்கு உட்பட்டே செய்கிறோம். அத்துடன் சட்டரீதியாக கொடுக்கப்பட்டுள்ளவற்றையும் திரும்பப் பெறுவதற்காக சட்டத்தை மாற்றுவதற்கான குழுவையும் தேசிய மக்கள் சக்தி அமைத்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு இல்லையென்றால் அவர்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் அஸ்வெசும கிடைக்கும் மட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் வீடு தருவோம். ஆனால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இந்நாட்டு குடிமக்கள் எதையாவது வாங்க விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகள் எல்லாம் விண்ணப்பிக்காமல் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் விண்ணப்பம் அனுப்பச் சொல்கிறோம். விண்ணப்பத்தை பரிசீலித்து கருணையுடன் ஏதாவது கொடுப்பது தவறா? இது பழிவாங்கல் அல்ல.
நமது நாட்டின் அரசியலை ஒரு தரத்திற்கு கொண்டு வருவோம். ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் தங்களுக்கும் உரிமை உண்டு என்று நினைக்கிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு அரசியலை தரப்படுத்துகிறது. நியாயமற்ற அனைத்கும் ஒழிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment