எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தின் உதவித்திட்டமாக கிடைக்கப்பெற்ற இந்த பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் கீ ஜெங் கொங் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும். அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
கல்வி எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. எமது அரசாங்கம் கல்விக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. நாம் அபிவிருத்தி அடைய கல்வி ஒரு அடிப்படை வழிமுறையாகும். எந்தவொரு சமூக, பொருளாதார வேறுபாடு அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன் கல்வியை அணுக கல்வியில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.
பாடசாலை சீருடைக்கான பொருட்களை வழங்குவதில் சீனாவின் பெருந்தன்மை எங்களுக்கு மிகவும் முக்கியமானது, இல்லாவிட்டால் இதற்கான நிதியை நாங்கள் தேட வேண்டியிருக்கும். இது சீனாவிடமிருந்து கிடைக்கும் முக்கியமான நன்கொடை என்றும், இதற்கு அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Post a Comment