புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 37 வருட காலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது.
எனவே சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும், அமைச்சரவையில் அனுமதி பெறாமலுமே அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இருப்பினும் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகிறது.
எனவே பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும், அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுகின்றது.
நடைமுறையில் உள்ள பழைமை வாய்ந்த அரசியலமைப்பிற்கு பதிலாக புதிய அரசியலமைப்பு உருவாக்குவதை முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கம். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Post a Comment