Ads (728x90)

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்ள வேண்டும். 

எனவே இந்த சட்டத்தை ஏற்படுத்தி அனுமதி பெற்றக்கொள்ளும் வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. 

என்று பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருக்கும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் வளங்களை அழித்த மோசடிகாரர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். இந்த பிரதான இரண்டு விடயங்களை நாங்கள் செய்வோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம்.

நாங்கள் புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்கள் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க நடவடிக்கைகளை சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள மாத்திரமே பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு செயற்படாது. தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது எமது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும். நாங்கள் பல்வேறு மத கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். அதனால் அனைவரதும் மத கலாசாரத்தை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவே எமது கொள்கை. 

வடக்கு, கிழக்கு தொடர்பில் கதைக்கும்போது அவர்கள், நாங்கள் என பிரித்தே பார்க்கிறோம். அந்த மனநிலையை மாற்றி, அவர்கள்தான் நாங்கள் நாங்கள்தான் அவர்கள் என்ற மனநிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இலங்கையர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும்.

மேலும் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டோம். ஆனால் அந்த நிலை யாருக்கும் ஏற்படும் வகையில் எமது அரசாங்கம் செயற்படாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம். 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டிதொரு சட்டமாகும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த கொள்கையில் மாற்றம் இல்லை. ஆனால் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்வதே எமது திட்டம்.

பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். அதனை நாங்கள் இல்லாமல் செய்ய மாட்டோம். சமூகவலைத்தலங்களில் எதனை வேண்டுமானாலும் பிரசுரிக்க உரிமை இருக்கிறது.

நாங்கள் அரசியல் ரீதியில் பிளவுபட்டிருந்தாலும் நாட்டில் இனவாதம் மதவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட முடியும். அதனால் அனைவரும் ஒன்றுபட்டாலே இதனை மேற்கொள்ள முடியும். அதனை இந்த பாராளுமன்றத்தில் இருந்து ஆரம்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த செய்தியை எமக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரதும் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சட்டத்தின் ஆட்சி தொடர்பில் நாங்கள் தொடர்ந்து கதைக்கிறோம். ஆனால் கடந்த அரசாங்கங்கள் சட்டத்தின் ஆட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை. ஆட்சியாளர்கள் தங்களின் தேவைக்கே சட்டத்தின் ஆட்சியை பயன்படுத்தி வந்தார்கள்.

அதனால் தொடர்ந்தும் செல்வந்தர்களும் அதிகாரம் உடையவர்களும் ஒரு சட்டத்தையும், சாதாரண மக்களுக்கு வேறு சட்டத்தையும் நிலைநாட்ட தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் சட்டத்தின் ஆட்சி முக்கியமாகும். சட்டத்தின் ஆட்சி இல்லை என்றாலும் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வரமாட்டார்கள்.

அதனால் மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எமது நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget