Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களும், கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் நாடளாவிய ரீதியில் 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்து குறித்த விபரங்களை சபைக்கு சமர்ப்பித்தார்.

கடந்த அரசாங்கத்தால் அரசியல் இலஞ்சமாக பலருக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை வெளியிடுவதாக கூறியிருந்தோம். அதற்கமைய குறித்த விபரங்களை சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். 

இந்த ஆவணத்தின்படி மேல் மாகாணத்தில் 110, தென் மாகாணத்தில் 48, வடக்கு மாகாணத்தில் 32,  கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45, வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 என்ற அடிப்படையில் மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் 9 மாகாணங்களுக்கும் மொத்தமாக  361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9 ,மாத்தறை 5, அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை 5, கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலநறுவை 3. புத்தளம் 6, குருநாகல் 8. பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2   என்ற அடிப்படையில்    மொத்தமாக 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அனுமதி பத்திரம் எதுவும் வழங்கப்படவில்லை.

2024 ஜனவரி முதல் இவ்வாறு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சி தாவலுக்காக அரசியல் இலஞ்சமாகவே மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்னரே அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்கள் பார் குமார் என்று பல வடிவங்களில் மாற்றப்பட்டன. குறித்த விபரங்களை நாட்டு மக்களும் இனி தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget