பருத்தித்துறைக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்ய முயன்றபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் துப்பாக்கிச் பிரயோகத்தில் இரண்டு மீனவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்கள் தற்சமயம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் தற்காலிக உயர்ஸ்தானிகரை வரவழைத்து, சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடமும் கேள்வி எழுப்பியுள்ளது.
வாழ்வாதாரக் கவலைகளை மனதில் கொண்டு, மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானமாக கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது.
எந்தச் சூழ்நிலையிலும் பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
Post a Comment