Ads (728x90)

77 வது தேசிய சுதந்திர தின விழா ”தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று 04 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

காலை 7.20 மணியளவில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பின்னர் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றது.

பிரதம நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ இந்நிகழ்வுக்கு முதலில் வருகை தந்தார்.

அத்துடன் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் வருகையைத் தொடர்ந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வருகை தந்தார்.

இதனை தொடர்ந்து இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வருகை தந்தார்.

பின்னர் முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் ஜனாதிபதியை பிரதான கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மங்கள வாத்தியங்கள் மற்றும் சாக்ஸ் இசைக்கருவிகள் முழங்க குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடுவதன் மூலம் 77வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடங்கியது.

பாடசாலை மாணவிகள் "ஜயமங்கள காதா" மற்றும் "தேவோ வஸ்ஸது காலேன" பாடல்கள் பாடப்பட்டது.  தொடர்ந்து தாய்நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் வளமான ஒரு எதிர்கால அரசையும், நவீன இலங்கை தேசத்தையும் கனவு கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்து என ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசத்தின் பெருமையையும், கண்ணியத்தையும் வெளிப்படுத்தும் வகையில், படையினரின் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதேவேளை, நாட்டிற்கு கௌரவத்தை வழங்கும் வகையில் காலி முகத்திடலில் 25 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சுதந்திர தின கொண்டாட்டத்தை உயிர்ப்பிக்கும் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய கலாசார நடனங்கள் நடைபெற்றது.

இறுதியாக பாடசாலை மாணவர்களால் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதையடுத்து 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் இனிதே நிறைவடைந்தன.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளைக் கண்டுகளிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget