தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.
இச்சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும், அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸ விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள், அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர்.
காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்தி வருகின்றார். அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திஸ்ஸ விகாரையை அகற்றி அந்த காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்த போது, ஆளுநர் குறித்த காணி உரிமையாளர்கள் மாற்று காணியை கேட்டுள்ளதாக குறிப்பிட்டார். குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் அதனை தெளிவுபடுத்தும் முகமாக ஆளுநர் குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.
Post a Comment