நான் சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன். எனது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்துக்கு கட்டுப்படுகிறார்கள். நாம் ஒருபோதும் சட்டத்துக்கு மேல் செயல்பட மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
குருநாகலில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தாஜுதீன் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இவை அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் இல்லை. 2009 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி லசந்த கொலை செய்யப்பட்டார்.16 வருடங்கள் கடந்துள்ளன. பொலிஸ் திணைக்களம் கண்டு பிடிக்காமல் போயுள்ளதா? இல்லை. எமது பொலிஸ் திணைக்களத்தில் திறமையான அதிகாரிகளே உள்ளனர். எந்தவொரு சர்ச்சைக்குரிய குற்றங்களாக இருந்தாலும் அதனை பொலிஸ் திணைக்களம் கண்டு பிடிக்கிறது.
ஆனால் லசந்த, தாஜுதீன் தொடர்பில் உண்மைகளை அறிய முடியாமல் போயுள்ளது. எக்னெலிகொட உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களை அரசாங்கமே தாக்கியது. அதுவே உண்மை. குற்றவாளிகள் அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற்றனர். இது தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். குற்றங்களை செய்து விட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே இருக்க முடியுமானால் அரசாங்கம் இருந்து என்ன பயன்? அதிகார பலம் உள்ளவர்கள் சட்டத்துக்கு அஞ்சுவதில்லை. சட்டத்தை மதிப்பதில்லை. ஒரு பிள்ளையிடம் அரசாங்கம் 7 துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளது. பாதுகாப்பையும் வழங்கியுள்ளனனர்.
ஆட்சியாளர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அவ்வாறு சட்டத்துக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒழுக்கமற்ற நாடே உருவாகும். ஒழுக்கமான நாட்டை கட்டியெழுப்புவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்தார்.
Post a Comment