இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சகலரும் ஒன்றிணைந்துள்ள இந்த தருணத்தில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
அதிகார மோகமுடையவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்துள்ளனர். வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாதம் பயன்படுத்தப்படுவதாகவும், இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
காலத்துக்கு காலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தாம் செய்த குற்றங்களை மறைப்பதற்காகவும் யுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இனம், மதம் என்ற பேதமின்றி நாட்டுக்காகப் போரிட்டவர்களைத் தினமும் நாம் நினைவுகூர வேண்டும். நாடு அவர்களுக்குக் கடன்பட்டுள்ளது.
இந்த தூபியில் தனது மகனின் பெயர் உள்ளதா, தனது கனவனின் பெயர் உள்ளதா, தனது தந்தையின் பெயர் உள்ளதா என உறவுகள் தேடித்தேடித் துயருவதைப் பார்த்திருக்கின்றோம்.
இது மாத்திரமா? வடக்கிலும் இதே நிலைமைதான். அங்குள்ளவர்கள் தமது பிள்ளைகளையும், கனவர்மாரையும், பெற்றோரையும் இழந்தவர்கள் அவர்களது புகைப்படங்களை வைத்து கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
யுத்தத்தில் போரிட்ட படையினரின் நோக்கம் யுத்தம் வேண்டும் என்பதல்ல, மாறாகச் சமாதானத்தை எதிர்பார்த்தே அவர்கள் போரிட்டனர்.
வடக்கு, கிழக்கு என்ற பேதமின்றி இந்த போரினால் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு பெற்றோருக்கும், தமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள்.
மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுத்து, அமைதியானதொரு நாட்டை எதிர்கால சந்ததிக்கு கையளிப்பதே தற்போதுள்ள எம் அனைவரினதும் பொறுப்பாகும்.
எனவே சந்தேகம், கோபம், வெறுப்பு என்பவற்றைக் களைந்து, சகோதரத்துவம், கருணை, பாசம் மிக்க நாட்டினை அனைவரும் உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment