புலனாய்வு அறிக்கைகளின்படி இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சமகி ஜன பலவேகய ஆகியவற்றின் முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மற்றும் தற்போதைய மாகாண அரசியல்வாதிகள், 10 சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பல்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணுவதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
விசாரணைகளுக்குப் பிறகு அத்தகைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குற்றக் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகப் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், இதற்குப் பின்னணியில் சில அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாகப் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2,278 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிக குற்றங்கள் இடம்பெறும் 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 15 விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் குற்றக்குழுக்கள் தொடர்பில் தகவல்களைப் புலனாய்வு பிரிவுகள் ஊடாக சேகரிப்பதுடன், பல்வேறு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.
Post a Comment