Ads (728x90)

வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் மற்றும் பாதைகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடம் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். 

யாழ். மாவட்டத்துக்கான குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பில் ஆளுநர் குறிப்பிட்டார். கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக குடிதண்ணீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான செலவு அதிகம் என்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்தார். 

சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இல்லை என்றும் இதன் காரணமாக பல சவால்களை எதிர்கொள்வதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப் பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவற்றை முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் இங்கு வலியுறுத்தினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget