Ads (728x90)


செவனகல சீனி கைத்தொழிற்சாலையை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. ஆனால் ஊழல் மோசடியாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் நோக்கம் இல்லை. 

சீனி கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாப்போம். ஆனால் அரசியல் நோக்கத்துடனான போராட்டங்களுக்கு அடிபணிய போவதில்லை என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செவனகல சீனி கைத்தொழிற்சாலை மூடப்படுவதாகவும், கருப்பு உற்பத்தியாளர்களிடமிருந்து கரும்பு கொள்வனவு செய்யப்படுவதில்லை என்றும் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின.

கரும்பு உற்பத்தியாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னணியையும் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

சீனி கைத்தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும், கரும்பு உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கரும்பு உற்பத்தியாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது அரசுக்கு சொந்தமான சீனி கைத்தொழிற்சாலைகளில் 33 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்டது. அப்போது எவரும் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடவில்லை.

அரச சீனி கைத்தொழிற்சாலையில் உயர் பதவி வகித்த நுவன் தர்மரத்ன என்பவர் நிறுவனத்துக்கு எதிராக செயற்பட்டதால் அவர் பதவி நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களில் செவனகல சீனி தொழிற்சாலையை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

உண்மை மாத்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு செய்தி வெளியிடும் ஊடகம் ஒன்று பொய்யை மாத்திரம் குறிப்பிடுகிறது.  அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செய்திகளை திரிபுப்படுத்தி போலியான விடயங்களை மக்கள் மயப்படுத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைய 2024 ஆம் ஆண்டு முதல் காலப்பகுதியில் இருந்து தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு வெற் வரி அறவிடப்படுகிறது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50 ரூபாய் என்ற அடிப்படையில் வெற் வரி அறவிடப்படுகிறது. இந்த வரியில் திருத்தம் செய்ய முடியாது.

சீனி உற்பத்தியின் ஏனைய உற்பத்திகளுக்கான வரி மற்றும் விலையில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget