339 உள்ளுராட்சி மன்றங்களில் 161 உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர் நியமனத்தில் சிக்கல் காணப்படாத நிலையில் குறித்த உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் மேயர், பிரதி மேயர், தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்களை அத்தாட்சிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளது.
14 மாநகர சபைகள், 12 நகர சபைகள் மற்றும் 135 பிரதேச சபைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் 14 மேயர்களும், 14 பிரதி மேயர்களும், 147 தலைவர்களும், 147 உதவி தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 14 மாநகர சபைகளில் 13 மாநகர சபைகளின் மேயர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவி தேசிய காங்கிரஸ் கட்சி வசமாகியுள்ளது.
12 நகர சபைகளில் 11 நகர சபைகளின் தலைவர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் தலைவர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசமாகியுள்ளது.
அத்துடன் 135 பிரதேச சபைகளில் 127 பிரதேச சபைகளின் தலைவர் மற்றும் உதவி தலைவர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. ஏனைய 08 பிரதேச சபைகளில் தலைவர் மற்றும் உதவி தலைவர் பதவிகள் இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் மாகாண ஆணையாளருக்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சரினால் 2025.02.17 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாகாண சபைகளின் பதவி காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
Post a Comment