நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு மக்களின் வாழ்க்கைக்காக உழைக்க விருப்பமற்ற அரசியல் பிரிவுகளே காரணம் என கூறிய லீ ஜே-மியுங் மக்களை ஒன்றிணைக்க பாடுபடப்போவதாக தனது பதவியேற்பு உரையில் தெரிவித்தார்.
பிளவு அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் ஜனாதிபதியாக மாறுவேன் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார். மேலும் அவசரகால பொருளாதார பணிக்குழு உடனடியாக செயற்படுத்தப்படும் என்றும் லீ ஜே-மியுங் அறிவித்தார்.
தென்கொரியாவில் இராணுவ அவசர நிலையை செயற்படுத்தியதற்காக அப்போதைய ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தென் கொரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் லீ ஜே-மியுங் 49.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழமைவாத மக்கள் சக்தி கட்சியின் தலைவர் கிம் மூன்-சூ 41.3 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றார்.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் இராணுவச் சட்ட அமுலாக்க முயற்சி தோல்வியடைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
இந்த சட்ட அமுலாக்க முயற்சி பெரும் போராட்டங்களைத் தூண்டியதுடன், அது முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலை பதவி நீக்கவும் வழி வகுத்தது.
Post a Comment