புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வட மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் வட மாகாண தலைமைச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய கல்வி முறையில், முதலாம் ஆண்டில் நுழையும் ஒரு பிள்ளை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடனோ, மகிழ்ச்சியுடனோ பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதில்லை. பிள்ளைகளுக்கு உகந்த பாடசாலைச் சூழலும், இணக்கமான கற்பித்தல் முறையும் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலைகள் ஊடாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்முனைவோர், கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழிற்திறன் கொண்ட நிபுணர்களையும் நாம் உருவாக்க வேண்டும்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஒவ்வொரு மாகாணமும், மாவட்டமும், வலயமும் முக்கியமானது. சமத்துவம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. நம் நாட்டில் உள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்க நாம் விரும்பினால், அனைத்து வளங்களையும் ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு மாவட்டத்திற்கோ மட்டும் ஒதுக்க முடியாது. அவை நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இதில் பின்தங்கிய மற்றும் வளங்கள் குறைந்த பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பின்தங்கிய பாடசாலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வு காண்பதுடன் அனைத்துப் பாடசாலைகளிலும் டிஜிட்டல் வசதிகள், கற்றல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், சுகாதார வசதிகள், குடிநீர், விளையாட்டு மைதானங்கள், ஆய்வுகூடங்கள், ஆக்கத்திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் கலை, அழகியல் பிரிவுகள் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும்.
அதற்கான ஒரு சிறந்த திட்டம் எங்களிடம் உள்ளது. மேலும் மதிப்பீட்டு முறையும் மிகவும் முக்கியமானது. பிள்ளைகளுக்கு நட்புறவான கற்றல்-கற்பித்தல் சூழல் நமக்குத் தேவை. பிள்ளைகளுக்கு இவற்றை உறுதிசெய்து, சமூகப் பொறுப்புள்ள ஒரு குடிமகனைப் பாடசாலையிலிருந்து உருவாக்க வேண்டும்.
அதற்காகவே நாங்கள் இந்தப் பொது உரையாடலையும், கலந்துரையாடலையும் முன்னெடுத்து வருகிறோம். ஏனெனில் இது கல்வி அமைச்சின் சீர்திருத்தமோ, ஹரிணி அமரசூரியவினுடைய சீர்திருத்தமோ, அல்லது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினுடைய சீர்திருத்தமோ அல்ல. இது இலங்கையின் தேசிய கல்விச் சீர்திருத்தம். நாம் அனைவரும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்
Post a Comment