அரசியல் அதிகாரம் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களை பயன்படுத்தும் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முடிவுக்கு வந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் 2025 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவும் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
வெளிநாட்டு கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் நாட்டிற்கு கிடைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் விசேட திட்ட அலுவலகங்களை நிறுவுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பிற்குள் செயல்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர்புடைய திட்டங்களை நிறைவு செய்து, மக்களுக்கு நன்மைகளை வழங்குமாறு மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
பாடசாலை கட்டமைப்பை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வலய மட்டத்தில் ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று அவற்றை நெருக்கமாக ஆராய்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான சிறந்த தீர்வை முன்வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

Post a Comment