Ads (728x90)

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறையால் சமூகத்தை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்ற பாதாள ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை ஒருபோதும் மாற்றியமைக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகுல் மடுவவில் நேற்று நடைபெற்ற சியம் மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரை தரப்பின் புதிய அனுநாயக்க அதி வணக்கத்திற்குரிய நாரன்பனாவே ஆனந்த நாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சமூக மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதில் மகா சங்கத்தினருக்கு முக்கிய பங்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த காலங்களில் அரசுக்கு சவால் விடப்பட்ட போதெல்லாம், அதற்கு எதிராக முன்வந்தது மகா சங்கத்தினரே என்றும் குறிப்பிட்டார்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், கிராமங்களுக்குச் சென்று மக்களை விழிப்புணர்வூட்டுவதில் மகா சங்கத்தினர் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் போது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், நாட்டின் வரலாற்று பாரம்பரியம், இயற்கை அழகு, வனவிலங்கு பகுதிகள் மற்றும் இலங்கை மக்களின் விருந்தோம்பலுக்கு உலகளாவிய பாராட்டு போன்ற காரணிகளின் அடிப்படையில் சுற்றுலாத்துறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget