பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் பங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே பங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம்.
சிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும்கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து, மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால் தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் இவர்களுக்குச் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் பருக்களும் அதிகரிக்காது. தழும்புகளும் வராது.
சிஸ்டிக் அக்னே உள்ளவர்களது சருமத் துவாரங்கள் அகன்று, பெரிதாக இருக்கும். வெளியில் செல்லும் போது சருமத்துக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார்களானால், இவர்களது சருமத்திலிருந்து சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசையானது வெளியே கசிந்து, வெளிப்புற மாசுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். துவாரங்கள் பெரிதாக இருப்பதால் பருக்களும் பெரிய கொப்புளங்கள் போலவே வரும்.
இவர்கள் தலையில் பொடுகு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்து பார்த்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டாலே பருவையும் அது விட்டுச் செல்கிற தழும்பையும் விரட்டலாம்.
பரு வந்து, தழும்புகளும் தங்கி விட்டவர்கள் என்ன செய்யலாம்? வெறும் பேஷியல் மட்டுமே தழும்புகளைப் போக்காது. மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோதெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் இவர்களுக்குப் பலன் தரும். தழும்பு ஏற்பட்டவர்களது சருமத்தில் குழிகள் காணப்படும்.
மைக்ரோடெர்மாப்ரேஷன் என்கிற சிகிச்சை, சருமத்தை சமன்படுத்தி, குழிகளை மறைக்கும். 95 சதவிகிதம் தழும்புகள் மறையும். 100 சதவிகிதம் தெரியாமலிருக்க ஸ்கின் பீல் சிகிச்சை மட்டுமே தீர்வு. சருமத்தின் ஒரு லேயரை அப்படியே உரித்தெடுத்து, சருமத்தைப் புதுப்பிக்கச் செய்கிற இந்த சிகிச்சைக்குப் பிறகு சூரிய வெளிச்சமோ, வீட்டுக்குள் பல்பு வெளிச்சமோகூட படக்கூடாது. வெளிச்சம் பட்டால், ஸ்கின் பீல் செய்யப்பட்ட சருமம் கருப்பாகி, அது நிரந்தரமாகத் தங்கி விடும்.
முகச் சருமத்தை லேசாக, மிக மென்மையாகக் கிள்ளி விடுகிற சிகிச்சையை 20 வயதுக்கு மேல் எல்லோருமே ஒரு பயிற்சியாகச் செய்யலாம். சருமத்தின் மூன்றாவது அடுக்கான சப்கியூட்டேனியஸ் லேயரில்தான் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் இருக்கின்றன. லேசாகக் கிள்ளி விடுவதன் மூலம் இந்த செல்கள் தூண்டப்பட்டு மேலெழுந்து வரும்.
தினசரி காலையில் பல் துலக்கும் போது, வாய் நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ளவும். வாய் வலிக்கும் வரை வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு துப்பவும். இப்படிச் செய்வதாலும் கன்னத் தசைகள் விரிவடையும். தழும்புகள் மறையும்.

Post a Comment